உலா போகும் ராகதேவன்
சென்னை:
உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் இதயங்களை 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இசைமழையால் நனையவைத்துக் கொண்டுள்ள இசைஞானி இளையராஜா அடுத்த ஆண்டு உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில்நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார்.
அன்னக்கிளியில் ஆரம்பித்து இன்று வரை தனக்கு இணை யாரும் இல்லை என்பதை நிரூபித்து வரும் இளையராஜா12 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாக நிருபர்களை சந்தித்தார்.
பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை அறவே தவிர்க்கும் இளையராஜா இந்த முறை மிகவும் வெளிப்படையாக,மனம் விட்டுப் பேசினார்.
சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் செய்தியாளர்களுடன் இளையராஜா பகிர்ந்து கொண்டது: உங்களை சந்தித்துகிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஆகி விட்டன. முதல் முறையாக சிம்பொனி இசை அமைத்த பிறகு உங்களைசந்தித்தேன். இப்போது மீண்டும் சந்திக்கிறேன். மிக்க மகிழ்ச்சி.
2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நகரங்களில் 100 இசைக் கலைஞர்களுடன்கூடிய குழுவுடன் சென்று நேரடி இசைக் கச்சேரிகளை நடத்தவுள்ளேன். எனது வாழ்க்கையில் ரசிகர்களைநேரடியாக சந்தித்து இசைக் கச்சேரி நடத்துவது இதுவே முதல் முறை. இதில் கிடைக்கும் பணத்தை சில சமூகப்பணிகளுக்கு தந்து உதவ இருக்கிறேன்
எனது கச்சேரி நடக்கப் போகும் இடங்களில் சென்னை, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்காஆகியவையும் அடங்கும். பல முன்னணிப் பாடகர்கள், பாடகிகள் எனது குழுவுடன் கச்சேரிகளில் கலந்துகொள்ளவுள்ளனர். வாத்தியக் கலைஞர்கள் சுமார் 100 பேருடன் செல்லப் போகிறேன். இத்தனை பேரை நான்இசை நிகழ்ச்சிக்காக இதுவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றதில்லை.
இந்தக் கச்சேரிகள் மூலம் கிடைக்கும் பணத்தை பல்வேறு அறக்கட்டளைகளுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும்வழங்கவுள்ளேன். துபாயைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. முதல் நிகழ்ச்சிதுபாயில் நடைபெறவுள்ளது. துபாயில் உள்ள தென்னிந்திய கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழாவையொட்டிஇந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனக்கு நேரடிக் கச்சேரிகள் செய்வதில் அவ்வளவாக விருப்பம் இல்லை. ஏற்கனவே போட்ட ட்யூன்களை மீண்டும்ஒரு முறை போடுவதில் சுவை இருக்காது என்பதுதான் அதற்குக் காரணம். ரெக்கார்டிங் தியேட்டர்தான் எனக்குமிகவும் வசதியானது.
இருப்பினும் இந்த நேரடி இசைக் கச்சேரிகள் நடத்துவது தொடர்பாக துபாய் நிறுவன தலைமை அதிகாரி ராஜ்என்னை வற்புறுத்தியபோது உடனடியாக ஒத்துக் கொண்டேன். ரசிகர்களை சந்திப்பது ஒருபக்கம் இருந்தாலும்,இதன் மூலம் வசூலாகும் பணம் முதியவர்கள் இல்லத்துக்கும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், உடல்ஊனமுற்றோர் இல்லங்களுக்கும் செல்லப் போவது எனக்கு மிக்க மகிழ்ச்சி தருகிறது என்றார் இளையராஜா.
எத்தனையோ இசையமைப்பாளர்கள் குறுகிய காலமே நிலைத்திருக்கும் நிலையில் நீங்கள் மட்டும் எப்படி இன்றும்இசையில் கோலோச்சுகிறீர்கள் என்ற கேள்விக்கு, சினிமா உலகில் இத்தனை காலம் நான் தாக்குப் பிடித்திருப்பதுஎப்படி என்று நீங்கள் கேட்பதற்கு எனது பதில்;
எந்தவித சூழ்நிலையையும் சமாளிக்கும் பக்குவம், இயற்கையான திறமையும் இயல்பிலேயே இருந்தால் யார்வேண்டுமானாலும் சாதிக்கலாம், நிலைத்திருக்கலாம். அப்படி இல்லாதவர்கள் விரைவிலேயே வலுவிழந்துவிடுவார்கள் என்றார் ராஜா புன்னகையுடன்.
உங்கள் நாட்டுக்கு வருகிறார் ராஜா.. இசையில் நழைய தயாராகுங்கள்...